நேற்று காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட நாலு பெண்டாட்டிக்காரர் கதை மிகச் சுவாரசியம். ஒரு ஹாலிவுட் காமெடிப் படம் போல அதன் சம்பவங்கள் இருக்கின்றன. பிடிப்பட்ட நபர் முதலில் மூன்று திருமணங்கள் செய்துவிட்டு (அதாவது மூன்று பெண்களுக்கும் தெரியாமல்) அதுவும் போதாமல் நான்காவது திருமணத்துக்கு முயற்சிக்கும் போது அகப்பட்டு விட்டார். யாருக்கு வரும் இந்தத் தைரியம்! தன்னிடமுள்ள லட்சக்கணக்கான கடன்களை அடைக்க, தான் திருமணம் செய்த அத்தனைப் பெண்களிடம் லட்சக்கணக்கில் வரதட்சணை கேட்டு அதன்மூலமாக மொத்தக் கடனையும் அடைத்திருக்கிறார் அந்த மன்மதன். வரதட்சணை என்கிற சமூக அவலத்தை இதைவிடவும் இன்னொருவர் கேவலப்படுத்திவிட முடியாது. மேலும் சகமனிதனாக இல்லாமல் வானத்திலிருந்து குதித்து வந்தவர்போல மாப்பிள்ளைகளுக்கு வழங்கப்படுகிற கண்மூடித்தனமான மரியாதைக்குக் கிடைக்கிற விலை இது!
தமிழ்நாட்டில் இதுபோன்ற பொய், புரட்டுக்
கதைகளுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் அசட்டுத்தனமான திருமண நம்பிக்கைகளின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ’படிக்காத பெண்கள் என்பதால் என்னால் சுலபமாக ஏமாற்ற முடிந்தது’ என்று சொல்கிற குற்றவாளி சென்னையிலுள்ள வெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூரியின் கணிதப் பேராசிரியர். எம்.பில். பட்டம் பெற்றவர்.